Saturday 29 November 2014

மூக்கு வளைந்திருக்கும் பிரச்சினை உண்மையா?

 
 
நான் 3 வருடங்களாக allergic rhinitis நோயால் அவதிப்படுகிறேன். இதற்கு ஏதாவது நல்ல தீர்வு இருக்கிறதா?
- கவிதா, கும்பகோணம்
 
Allergic rhinitis என்ற நோயை ஆயுர்வேதத்தில் பீனஸம், பிரதிச்யாயம் என்று அழைப்பார்கள். நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசு, மகரந்தம் போன்றவை மூக்கில் ஏறித் தும்மலை ஏற்படுத்தும். சில நேரம் உணவின் நறுமணமும் இச்செயலைச் செய்யும். மகரந்தத் துகள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒவ்வாமைக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
ஒவ்வாமையைத் தூண்டும் வஸ்துவை Allergen என்று அழைக்கிறார்கள். சிலருக்குப் பெயிண்ட் வாசனையால் ஒவ்வாமை ஏற்படும். சில செடி, கொடிகளின் மகரந்தம் காற்றில் பறந்து போகும்போது ஒவ்வாமை ஏற்படும். சூடான வறண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். குளிர்ந்த மழை நாட்களில் இவை அதிகம் இருக்காது. சிலருக்குப் பரம்பரையாக இந்நோய் பாதிப்பு காணப்படும். தாய் அல்லது தந்தைக்கு இந்நோய் இருந்தால், குழந்தைகளுக்கும் வரலாம். 

பாதிப்பு
 
இந்நோய் காரணமாக மூக்கில் அரிப்பு தோன்றும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மணத்தை உணர முடியாது. மூக்கு ஒழுகிக்கொண்டே இருக்கும். தும்மல் ஏற்படும், கண்ணிலிருந்து தண்ணீர் வரும். பிறகு மூக்கு, காது அடைபடும். இருமல் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். அசதி, தலைவலி போன்றவை வரும்.
சில நேரங்களில் மருத்துவர்கள், eosinophilia அதிகரித்துள்ளதா என்பதையும், IgE அளவையும் பரிசோதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஒவ்வாமையைத் தவிர்த்து வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். Nasal wash இதற்கு மிகவும் சிறந்தது. உப்பு நீரால் இதைச் செய்யலாம். கடையிலும் இதற்கான மருந்து கிடைக்கும். 

தீர்வு 

ஒரு கோப்பைச் சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் கலந்து செய்யலாம். ஒவ்வாமைக்கு anti histamine என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது சிலருக்குச் சற்று உறக்கத்தை ஏற்படுத்தும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்போது வண்டி ஓட்டவோ, இயந்திர வேலைகளைச் செய்யவோ கூடாது என்பது அறிவுரை. 

இப்போது மூக்கில் அடித்துக்கொள்ள ஸ்பிரேகூட வந்துவிட்டது. காய்ச்சல் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். நவீன மருத்துவத்தில் மூக்கு வளைந்திருக்கிறது (deviated nasal septum) என்று சொல்லி அதற்கு x-ray, scan போன்றவற்றை எடுக்கச் சொல்லி, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அறுவை சிகிச்சை செய்த பிறகும் சளியோடும், தும்மலோடும் இருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். 

மூக்கு இருந்தால் ஜலதோஷம் வரும். நோய் எதிர்ப்புத் தன்மையைத்தான் அதிகரிக்க வேண்டும். இந்தப் பீனஸ நோய்க்குக் காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப்படுபவை: 

1. ஒரு மனிதனின் ஆதி பலமாகிய அக்னி எனும் செரிக்கும் தன்மையின் பலம் குறைவது 

2. மல, மூத்திரங்களைத் தொடர்ந்து அடக்குவதால் வருவது 

3. நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்து வருவது 

4. ஒவ்வாமையால் வருவது 

இந்த நிலைகளில் கார்ப்பு சுவையுடைய சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சிற்றரத்தை, தாளிசபத்திரி போன்ற சூரணங்கள், இந்துகாந்த நெய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். 

நீர்க்கோவை என்ற பிரசித்தி பெற்ற மாத்திரையை இஞ்சிச் சாற்றிலோ, துளசிச் சாற்றிலோ அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். மீண்டும் நோய் வராமல் இருக்க நெல்லிக்காய் லேகியத்தைக் கொடுக்க வேண்டும். உடனடி நிவாரணத்துக்கு லெக்ஷ்மி விலாஸ ரசம், சுதர்ஸன சூரணம், துளசி கஷாயம் போன்றவை சிறந்த பலனை அளிக்கும். நோயிலிருந்து விடுபட்ட பிறகு மேலும் நோய் வராமல் இருப்பதற்கு நொச்சி தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது. இனி எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்: 

மூக்கடைப்புக்குக் கைமருந்து 

# லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்துப் புளிச்சாற்றிலோ, தண்ணீரிலோ குழைத்து, சற்றுச் சூடாக்கித் தலையிலும், மூக்கைச் சுற்றியும் போட்டு வரலாம். 

# திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சிறிய அளவு படிகாரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்துகொள்ள ஒரு துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி முகர்ந்து பார்க்க அடைப்பு, அரிப்பு மாறும். 

# புதினா இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்துவர நோய் எதிர்ப்பு உருவாகித் தும்மல் வருவது குறையும்.
# சிற்றகத்தி இலை, வெள் வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, பால், சாம்பிராணி ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால், மேற்கொண்டு ஜலதோஷம் வராது. இத்துடன் நொச்சியிலைச் சாறும் சேர்த்துக்கொள்ளவும். 

# உணவில் மணலிக் கீரை சேர்த்துக்கொள்ளலாம். 
 
# மிளகு ரசம் வைத்துக் குடிக்கலாம் 

# பூண்டு ஜூஸ் வைத்துக் குடிக்கலாம். 

# சூடான பாலில் மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்கலாம் 

# சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றைக் 
கஷாயமாக்கிப் பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம் 

# வெள்ளைப் பூண்டு குழம்பு வைத்துச் சாப்பிடலாம். 

# பால் சேர்க்காத காப்பி குடிக்கலாம்.

புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

படம்: எம். ஏ. ஸ்ரீராம்
 
 
கோடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருத்தியை உடல் பரிசோதனைக்காக சோதித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய வசந்த காலத்தில் அவளைப் பரிசோதித்த மருத்துவமனையிலிருந்து வந்த குறிப்பு "படிப்பில் கெட்டிக்காரி; ஆனால் வகுப்பில் அதிகம் பேசுவதில்லை" என்று தெரிவித்தது.
"இதுதான் இப்போதும் உனக்குப் பிரச்சினையா?" என்று அவளிடமே கேட்டேன்.
"எனக்கு கூச்சம் அதிகம் - அவ்வளவுதான்" என்றாள். 

இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?
உளவியல் ஆலோசகரைப் பாருங்கள் என்று அந்தப் பெண்ணுடைய தாயாரிடம் கூறலாம். 

அவளுடைய கல்வியறிவைச் சோதிக்கலாம். 

வகுப்பில் உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா; உன்னை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்கலாம். 

நிறைய பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள்தான், இது சகஜம்தான் என்று சொல்லலாம். 

இவற்றில் எதை நான் செய்திருந்தாலும் சரிதான். 

மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களைக் கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மௌனம்காக்கின்றன பல குழந்தைகள். ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக் கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளைப் பேச விட்டுக் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும்; அதுவும் பரிவோடு. 

மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மௌனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.
அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவக் கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றைப் பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். 

பேசாமலும் தங்கள் வேலைகளை மௌனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாச்சாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
"கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேட்டால் உடனே கையை உயர்த்தாத குழந்தைகள், வகுப்பில் ஏதும் பேசாத குழந்தைகள் ஆகியோர் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறார் டாக்டர் மெரிகங்காஸ். 

ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையைப் போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. 

"குழந்தைகளின் மனப்பாங்குதான் அவர்களுடைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. ஒருவருடைய சுபாவத்தை வைத்து அவர்கள் எப்படி இருப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று கணிப்பது தவறு. அவர்களுடைய லட்சியம் எப்படிப்பட்டது, செயல்வேகம் எப்படிப்பட்டது, திறமை எப்படிப்பட்டது என்பதை சுபாவத்தை வைத்து ஊகித்துவிட முடியாது" என்கிறார் டாக்டர் வில்லியம் கரே. இவர் பிலடெல்பியாவில் குழந்தைகள் மருத்துவப் பிரிவு பேராசிரியராகப் பணிபுரிகிறார். "உங்கள் குழந்தையின் மனப்பாங்கைப் புரி்ந்துகொள்ளுங்கள்" என்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். 

"மௌனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்குப் புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மௌனாக இருக்கிறது. புதிய சூழலுக்குப் பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய வகுப்புக்குப் போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கும். அம்மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.
பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்" என்கிறார் ஆன் மேரி ஆல்பனோ. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனப் பதற்றம் தொடர்பான நோயியல் பிரிவுத் துறைத் தலைவர். 

காது கேளாமை, கரும்பலகையில் எழுதியிருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் குழந்தையிடம்தான் குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் மௌனமே, உதவிக்காக ஓங்கி ஓலிக்கும் குரல்தான் என்பதைப் புரி்ந்துகொள்ள வேண்டும். 

சாதாரணமாகக் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டாலும் அந்தக் கூச்சம் இயல்பானதுதானா அல்லது சமூகத்தைப் பார்த்து அவர்களோடு சேர முடியாமல் போனதால் ஏற்பட்டதா என்பதைப் பிரித்து அறிய வேண்டும். சரியாக அடையாளம் காணாமல் மருந்து மாத்திரைகளை வழங்குவது தவறானது என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
"புதிய வகுப்பறை, புதிய வகுப்புத் தோழர்கள், புதிய பாடத்திட்டம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பதற்றம் பெரிதாக இருக்கும். இந்தச் சூழலை ஊகித்துப் பெற்றோர்கள்தான் அவர்களை முன்கூட்டியே அதற்குத் தயார்படுத்த வேண்டும்" என்கிறார் மன்ஹாட்டனில் உள்ள குழந்தைகள் மன நலக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீவன் கர்ட்ஸ். அதேசமயம், "அவசரப்பட்டோ அதிக அளவிலோ அடிக்கடியோ அவர்களை இந்த மாதிரியான சூழல்களுக்குத் தயார்படுத்திக்கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் அவர்களால் சுயமாக இத்தகைய புதிய சூழலுக்குத் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம்" என்றும் அவர் எச்சரிக்கிறார். 

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை இன்னொரு குழந்தையோடு சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பழக்கலாம். அமைதியான, சாதுவான அந்தக் குழந்தைகளைப் பக்கத்தில் அமர்த்தி சாதுவான குழந்தைக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை ஊட்டலாம்" என்கிறார் கர்ட்ஸ்.
"இதில் செய்யக் கூடாதது எதுவென்றால், கூச்சப்படாதே, அமைதியாக இருக்காதே என்று சதா அறிவுரை கூறுவதுதான்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மெரிகங்காஸ். "கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் போக்கை மாற்ற முயற்சிப்பதைவிட அதைப் புரிந்துகொண்டு உலகில் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைச் சொல்லித்தருவதுதான் நல்லது" என்று நம்பிக்கை தருகிறார் பிரகாசிக்கும் கண்களோடு!

தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்

தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு. 
 
தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு. 
 
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 23,000 பேர் நோய்த் தொற்றுகளால் மட்டும் உயிரிழக்கின்றனர். நோய்த் தடுப்பு மருந்து மாத்திரைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டுப்படாத நோய்த் தொற்றுகளால் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு உடல்நலம் கெடுகிறது. இது இப்போது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எனவேதான், அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் முதல் முறையாக நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாதவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.
"உயிரிழந்தவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிடக் குறைவாக இருக்கிறது. காரணம், தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்த் தொற்று இறந்தவர்களிடத்தில் இருந்தாலும் அதனால்தான் இறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பலருடைய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 

‘நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல மருந்துகளை நாம் தயாரித்தாலும், அந்த மருந்துகளால் பாக்டீரியாக்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிறகு அது பல மடங்கு வீரியத்துடன் வந்து சமூகத்தைத் தாக்குகிறது. அப்போது சாதாரண நோய்த் தொற்றுக்கே மனிதர்கள் இறக்க நேரிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். எனவேதான், இப்போதைய உயிரிழப்புகள் கவனமுடன் ஆராயப்படுகின்றன. தோராயமாகக் கணக்கிட்டு இறப்பு எவ்வளவு என்று முன்னர் கூறிவந்தவர்கள் இப்போது துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கின்றனர்" என்று டப்ட்ஸ் பல்கலைக்கழக நுண்ணியிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் லெவி தெரிவிக்கிறார். நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதற்கான சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.
உலகமெங்கும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று 2007-ல் மதிப்பிடப்பட்டது. சிலவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டது. ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் பல பலனற்றுப் போய்விடவில்லை என்று இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே இறப்பைக் குறைத்துக் காட்டியிருப்பதாக டாக்டர் ஸ்டீவன் சாலமன் தெரிவிக்கிறார். "நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இறப்பு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்த இறப்புகளை மட்டும் கணக்கில் சேர்க்குமாறு கூறப்பட்டது" என்றார்.
அமெரிக்காவில் உள்ள பால், இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணை களில்தான் 70% நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைச் சரியாக ஆராய அந்தப் பண்ணைகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நோய்த் தடுப்பு மருந்துகளைக் கால்நடைகளும் உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனிதர்களின் உணவிலும் அப்படியே உடலிலும் இவை சேருகின்றன. எனவே நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பிராணிகளுக்குப் பண்ணையில் நோய்த்தடுப்பு மருந்து நோய் வராமல் இருப்பதற்காக மட்டுமல்ல, வேகமாக வளர்வதற்காகவும் தரப்படுகிறது. 

இப்படி பிராணிகளுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் பெரும்பாலானவை அவற்றுக்குத் தேவையானவையே அல்ல, அத்துடன் பொருத்தமானவையும் அல்ல. மனிதர்களுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்து ரகங்களிலும் பாதிக்கு மேல் பொருத்தமானவை அல்ல.
பாக்டீரியாக்களில் 17-வகையும் ஒரு பூஞ்சையும்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமி வகை களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன. "சி.ஆர்.இ. என்று பெயரிடப்பட்ட ஒருவகை பாக்டீரியா இப்போது அமெரிக்காவில் விற்கப்படும் எல்லாவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வமானது ஆனால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் இதற்குப் பலியாகின்றனர். வியப்பு என்னவென்றால் இது அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தீர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று டாக்டர் மைக்கேல் பெல் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
"எம்.ஆர்.எஸ்.ஏ. என்று அழைக்கப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத மற்றொரு வகை பாக்டீரியாவின் தாக்குதலும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மருத்துவமனை அல்லாத பிற இடங்களில் இந்த நோய்த் தொற்று இரட்டிப்பாகிவிட்டது. அது மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது. மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்த லாம் என்றால் அவை வேறு இடங்களுக்குச் சென்று பரவுவது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அயோவா பல்கலைக்கழக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு துறையைச் சேர்ந்த எலி பெரன்சிவிச் தெரிவிக்கிறார். 

"கால்நடைப் பண்ணைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரில் 38% பேருக்கு எம்.ஆர்.எஸ்.ஏ. வகை பாக்டீரியாக்களின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


மிருதுவான தோல் அல்லது திசுக்கள் உள்ளவர்கள் இந்த பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றனர். இதற்குப் பண்ணைகளில் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளைவிட வேறு காரணங்களும் இருக்கலாம்" என்று இந்த ஆய்வுகளில் ஈடுபடாத ஆனால் தகவல் தெரிந்த ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த்தடுப்பு மருந்து மாத்திரைகள் விற்பனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரூபாய்களில் நடக்கிறது. டாக்டர்கள் தங்களுடைய அனுபவம், படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். 

ஆனால் அவற்றுக்கும் கட்டுப்படாமல் பாக்டீரியாக்கள் வலுப்பெற்று வருவதை இந்த ஆய்வுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன.
தி நியூயார்க் டைம்ஸ் தமிழில்: சாரி

Friday 28 November 2014

புற்றுநோய் பாதிப்பு: 3-வது இடத்தில் சென்னை!

 

தொற்றாத நோய்கள் (Non communicable diseases) தான் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் மருத்துவ அச்சுறுத்தல். இந்தத் தொற்றாத நோய்களில் ஒன்றான புற்றுநோய், சென்னை மக்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

நம் நாட்டில் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் (National Cancer Registry Programme) மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் பதிவேட்டை (Population Based Cancer Registry) வெளியிட்டிருக்கிறது. இதன் அடிப்படை நோக்கம், புற்றுநோய் தாக்குதலின் அளவை மதிப்பிடுவதுதான். இதன் மூலம் சமூகத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை புரிந்துகொள்ள முடியும்.

2006 முதல் 2008 வரையிலான 3 ஆண்டு காலத்தில் புற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னைப் பதிவேட்டில் இருந்து நமக்குத் தெரிய வருபவை:
2008 வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகள் பதிவானது. அதில், சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 15,258 புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சென்னையில் ஆண் புற்றுநோயாளிகளைவிட பெண் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். (ஆண்கள் – 7392, பெண்கள் – 7866).
இதன்படி, சென்னையில் உள்ள ஆண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 14-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 12-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

தூக்கம் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்: ஆய்வு

 
 
இரவில் நேரத்துடன் படுக்கைக்குச் செல்லாத குழந்தைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளே, பொதுவாக நேரத்துக்கு தூங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கண்பார்வை பாதிப்பில் முன்னிலை வகிக்கும் ஏழை நாடுகள்!

 
 
உங்கள் பார்வைதிறன் பற்றிய சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும், உடனடியாக கண் டாக்டரை பார்க்கத் தவறாதீர்கள். ஏனென்றால், கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து, கேடராக்ட் போன்ற எளிமையாக தீர்க்கக்கூடிய கண் பிரச்சினைகள் முதல் குளுகோமா போன்ற மோசமான பார்வை குறைபாடுகள் வரை, உரிய நேரத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப்படாததாலேயே மோசமான நிலையை எட்டுகின்றன.

உலக அளவில் 28 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்வைதிறன் பாதிக்கப்பட்டோ, இழந்தோ இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான். பொருத்தமான கண்ணாடியை அணிவதாலோ, கண் புரை நீக்க அறுவைசிகிச்சை மூலமாகவோ அவற்றை குணப்படுத்திவிட முடியும்.
பெரும்பாலான ஏழை நாடுகளில் கண் மருத்துவர்கள் பரவலாக இருக்கின்றனர். ஆனால் ஏழைகளும் கிராமவாசிகளும் கண் மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை அல்லது பார்ப்பதற்கான வசதி அவர்களுக்கு இருப்பதில்லை.

உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கண் மருத்துவர்களால் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களுக்கே, சேவை வழங்க முடிகிறது. அவர்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்.

பருக்கள் வருவது ஏன்?

 
 
இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. 

எது முகப்பரு?
 
நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது. 

மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும். 

பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம். 

எப்போது, எதற்கு வருகிறது? 

பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.
சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றலாம். ‘5 - ஆல்பா ரெடக்டேஸ்’ (5-Alpha -reductase) எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்தி, பருக்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறது. 

என்ன சிகிச்சை?
 
பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரைக் கவலைப்பட வைப்பது இந்த வகைத் தழும்புகள்தான். 

இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம். 

பருக்கள் வராமல் தடுக்க…
 
முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். 

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. 

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம். 

கொழுப்பு உணவு வேண்டாம்!
 
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா? இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

கட்டுப்படுத்த என்ன வழி?
 
எந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள். 

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!

 
 
அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?
பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.
சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.
சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.
சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.

Monday 24 November 2014

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???











ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???

எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது....
அது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...

PLU code (price lookup number) 

இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:

* PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...

* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

*P LU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்...

அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..!!