Saturday 29 November 2014

மூக்கு வளைந்திருக்கும் பிரச்சினை உண்மையா?

 
 
நான் 3 வருடங்களாக allergic rhinitis நோயால் அவதிப்படுகிறேன். இதற்கு ஏதாவது நல்ல தீர்வு இருக்கிறதா?
- கவிதா, கும்பகோணம்
 
Allergic rhinitis என்ற நோயை ஆயுர்வேதத்தில் பீனஸம், பிரதிச்யாயம் என்று அழைப்பார்கள். நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் தூசு, மகரந்தம் போன்றவை மூக்கில் ஏறித் தும்மலை ஏற்படுத்தும். சில நேரம் உணவின் நறுமணமும் இச்செயலைச் செய்யும். மகரந்தத் துகள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒவ்வாமைக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
ஒவ்வாமையைத் தூண்டும் வஸ்துவை Allergen என்று அழைக்கிறார்கள். சிலருக்குப் பெயிண்ட் வாசனையால் ஒவ்வாமை ஏற்படும். சில செடி, கொடிகளின் மகரந்தம் காற்றில் பறந்து போகும்போது ஒவ்வாமை ஏற்படும். சூடான வறண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் அதிகமாக இருக்கும். குளிர்ந்த மழை நாட்களில் இவை அதிகம் இருக்காது. சிலருக்குப் பரம்பரையாக இந்நோய் பாதிப்பு காணப்படும். தாய் அல்லது தந்தைக்கு இந்நோய் இருந்தால், குழந்தைகளுக்கும் வரலாம். 

பாதிப்பு
 
இந்நோய் காரணமாக மூக்கில் அரிப்பு தோன்றும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மணத்தை உணர முடியாது. மூக்கு ஒழுகிக்கொண்டே இருக்கும். தும்மல் ஏற்படும், கண்ணிலிருந்து தண்ணீர் வரும். பிறகு மூக்கு, காது அடைபடும். இருமல் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். அசதி, தலைவலி போன்றவை வரும்.
சில நேரங்களில் மருத்துவர்கள், eosinophilia அதிகரித்துள்ளதா என்பதையும், IgE அளவையும் பரிசோதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஒவ்வாமையைத் தவிர்த்து வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். Nasal wash இதற்கு மிகவும் சிறந்தது. உப்பு நீரால் இதைச் செய்யலாம். கடையிலும் இதற்கான மருந்து கிடைக்கும். 

தீர்வு 

ஒரு கோப்பைச் சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் கலந்து செய்யலாம். ஒவ்வாமைக்கு anti histamine என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது சிலருக்குச் சற்று உறக்கத்தை ஏற்படுத்தும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்போது வண்டி ஓட்டவோ, இயந்திர வேலைகளைச் செய்யவோ கூடாது என்பது அறிவுரை. 

இப்போது மூக்கில் அடித்துக்கொள்ள ஸ்பிரேகூட வந்துவிட்டது. காய்ச்சல் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். நவீன மருத்துவத்தில் மூக்கு வளைந்திருக்கிறது (deviated nasal septum) என்று சொல்லி அதற்கு x-ray, scan போன்றவற்றை எடுக்கச் சொல்லி, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அறுவை சிகிச்சை செய்த பிறகும் சளியோடும், தும்மலோடும் இருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். 

மூக்கு இருந்தால் ஜலதோஷம் வரும். நோய் எதிர்ப்புத் தன்மையைத்தான் அதிகரிக்க வேண்டும். இந்தப் பீனஸ நோய்க்குக் காரணங்களாக ஆயுர்வேதத்தில் சொல்லப்படுபவை: 

1. ஒரு மனிதனின் ஆதி பலமாகிய அக்னி எனும் செரிக்கும் தன்மையின் பலம் குறைவது 

2. மல, மூத்திரங்களைத் தொடர்ந்து அடக்குவதால் வருவது 

3. நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்து வருவது 

4. ஒவ்வாமையால் வருவது 

இந்த நிலைகளில் கார்ப்பு சுவையுடைய சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சிற்றரத்தை, தாளிசபத்திரி போன்ற சூரணங்கள், இந்துகாந்த நெய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். 

நீர்க்கோவை என்ற பிரசித்தி பெற்ற மாத்திரையை இஞ்சிச் சாற்றிலோ, துளசிச் சாற்றிலோ அரைத்து மூக்கைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். மீண்டும் நோய் வராமல் இருக்க நெல்லிக்காய் லேகியத்தைக் கொடுக்க வேண்டும். உடனடி நிவாரணத்துக்கு லெக்ஷ்மி விலாஸ ரசம், சுதர்ஸன சூரணம், துளசி கஷாயம் போன்றவை சிறந்த பலனை அளிக்கும். நோயிலிருந்து விடுபட்ட பிறகு மேலும் நோய் வராமல் இருப்பதற்கு நொச்சி தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது. இனி எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்: 

மூக்கடைப்புக்குக் கைமருந்து 

# லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்துப் புளிச்சாற்றிலோ, தண்ணீரிலோ குழைத்து, சற்றுச் சூடாக்கித் தலையிலும், மூக்கைச் சுற்றியும் போட்டு வரலாம். 

# திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சிறிய அளவு படிகாரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்துகொள்ள ஒரு துணியில் சிறிய முடிச்சாகக் கட்டி முகர்ந்து பார்க்க அடைப்பு, அரிப்பு மாறும். 

# புதினா இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்துவர நோய் எதிர்ப்பு உருவாகித் தும்மல் வருவது குறையும்.
# சிற்றகத்தி இலை, வெள் வெங்காயம், சீரகம், கருஞ்சீரகம், மிளகு, பால், சாம்பிராணி ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால், மேற்கொண்டு ஜலதோஷம் வராது. இத்துடன் நொச்சியிலைச் சாறும் சேர்த்துக்கொள்ளவும். 

# உணவில் மணலிக் கீரை சேர்த்துக்கொள்ளலாம். 
 
# மிளகு ரசம் வைத்துக் குடிக்கலாம் 

# பூண்டு ஜூஸ் வைத்துக் குடிக்கலாம். 

# சூடான பாலில் மஞ்சள் பொடி சேர்த்துக் குடிக்கலாம் 

# சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றைக் 
கஷாயமாக்கிப் பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம் 

# வெள்ளைப் பூண்டு குழம்பு வைத்துச் சாப்பிடலாம். 

# பால் சேர்க்காத காப்பி குடிக்கலாம்.

புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மனதை!

படம்: எம். ஏ. ஸ்ரீராம்
 
 
கோடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருத்தியை உடல் பரிசோதனைக்காக சோதித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய வசந்த காலத்தில் அவளைப் பரிசோதித்த மருத்துவமனையிலிருந்து வந்த குறிப்பு "படிப்பில் கெட்டிக்காரி; ஆனால் வகுப்பில் அதிகம் பேசுவதில்லை" என்று தெரிவித்தது.
"இதுதான் இப்போதும் உனக்குப் பிரச்சினையா?" என்று அவளிடமே கேட்டேன்.
"எனக்கு கூச்சம் அதிகம் - அவ்வளவுதான்" என்றாள். 

இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?
உளவியல் ஆலோசகரைப் பாருங்கள் என்று அந்தப் பெண்ணுடைய தாயாரிடம் கூறலாம். 

அவளுடைய கல்வியறிவைச் சோதிக்கலாம். 

வகுப்பில் உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா; உன்னை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்கலாம். 

நிறைய பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள்தான், இது சகஜம்தான் என்று சொல்லலாம். 

இவற்றில் எதை நான் செய்திருந்தாலும் சரிதான். 

மற்றவர்களால் மிரட்டப்படும் குழந்தைகளும் ஏதாவது ஒரு வகையில் மனரீதியில் காயப்படுத்தப்பட்ட குழந்தைகளும் மற்றவர்கள் தங்களைக் கவனித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். இதனாலேயே தாங்கள் இருப்பதையே காட்டிக்கொள்ளாமல் மௌனம்காக்கின்றன பல குழந்தைகள். ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்வதில் உள்ள இன்னல் காரணமாகவே பேசாமல் இருக்கக் கூடும். எனவே, அதிகம் பேசும் குழந்தைகளைப் பேச விட்டுக் கேட்பதைவிட பேசாத குழந்தைகளிடம்தான் அதிகம் பேச வேண்டும்; அதுவும் பரிவோடு. 

மகிழ்ச்சியாக இருக்கிறாயா, எதைப் பார்த்தாவது அஞ்சுகிறாயா, ஏதாவது தேவையா என்றெல்லாம் கேட்டு அந்தக் குழந்தையின் மௌனத்துக்கும் ஒதுங்கலுக்கும் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளலாம். அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பதும் மனிதர்களின் இயல்பான சுபாவம்தான்.
அமெரிக்காவின் தேசிய மனநல மருத்துவக் கழகத்தின் மூத்த மருத்துவ நிபுணர் கேதலின் மெரிகங்காஸும் அவருடைய சகாக்களும் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவற்றைப் பதிவுசெய்தனர். அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்றே தெரிவித்தனர். 

பேசாமலும் தங்கள் வேலைகளை மௌனமாகவும் செய்யும் குழந்தைகளை அல்லது மாணவர்களை நாம் பாராட்டுவதோ கொண்டாடுவதோ கிடையாது. அதுவே பொதுவான கலாச்சாரமாகவும் இருக்கிறது. வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்று கூறி, பட்பட்டென்று பதில் சொல்லும் குழந்தைகளையே புத்திசாலிகள் என்று புகழும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
"கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேட்டால் உடனே கையை உயர்த்தாத குழந்தைகள், வகுப்பில் ஏதும் பேசாத குழந்தைகள் ஆகியோர் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறார் டாக்டர் மெரிகங்காஸ். 

ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையைப் போலவே அடுத்த குழந்தையின் சுபாவங்கள் இருப்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சிகளை ஆராய்வதுதான் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் சவாலாக இருக்கிறது. 

"குழந்தைகளின் மனப்பாங்குதான் அவர்களுடைய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. ஒருவருடைய சுபாவத்தை வைத்து அவர்கள் எப்படி இருப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று கணிப்பது தவறு. அவர்களுடைய லட்சியம் எப்படிப்பட்டது, செயல்வேகம் எப்படிப்பட்டது, திறமை எப்படிப்பட்டது என்பதை சுபாவத்தை வைத்து ஊகித்துவிட முடியாது" என்கிறார் டாக்டர் வில்லியம் கரே. இவர் பிலடெல்பியாவில் குழந்தைகள் மருத்துவப் பிரிவு பேராசிரியராகப் பணிபுரிகிறார். "உங்கள் குழந்தையின் மனப்பாங்கைப் புரி்ந்துகொள்ளுங்கள்" என்ற புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். 

"மௌனமாக இருப்பது அல்லது ஒதுங்கி இருப்பது என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். தனக்குப் புதிதான அல்லது மனதளவில் ஏற்க முடியாத புதிய சூழலில் குழந்தை பெரும்பாலும் மௌனாக இருக்கிறது. புதிய சூழலுக்குப் பழக்கப்படாத குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் புதிய வகுப்புக்குப் போகும்போது அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கும். அம்மாதிரி சூழல்களில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பது அவசியம்.
பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும் குழந்தையிடம் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தால் பெற்றோர்தான் அதை விசாரித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும்" என்கிறார் ஆன் மேரி ஆல்பனோ. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனப் பதற்றம் தொடர்பான நோயியல் பிரிவுத் துறைத் தலைவர். 

காது கேளாமை, கரும்பலகையில் எழுதியிருப்பதைப் பார்ப்பதில் உள்ள கோளாறு, பாடம் சொல்லித்தரும் விதம் சரியில்லாததால் புரிந்துகொள்ள முடியாமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்பதால் குழந்தையிடம்தான் குறை என்ற அவசர முடிவுக்கு வந்து குழந்தையைத் திட்டுவதோ தண்டிப்பதோ கூடாது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் மௌனமே, உதவிக்காக ஓங்கி ஓலிக்கும் குரல்தான் என்பதைப் புரி்ந்துகொள்ள வேண்டும். 

சாதாரணமாகக் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் என்று கூறப்பட்டாலும் அந்தக் கூச்சம் இயல்பானதுதானா அல்லது சமூகத்தைப் பார்த்து அவர்களோடு சேர முடியாமல் போனதால் ஏற்பட்டதா என்பதைப் பிரித்து அறிய வேண்டும். சரியாக அடையாளம் காணாமல் மருந்து மாத்திரைகளை வழங்குவது தவறானது என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
"புதிய வகுப்பறை, புதிய வகுப்புத் தோழர்கள், புதிய பாடத்திட்டம் என்று எல்லாமே புதிதாக இருக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மனப் பதற்றம் பெரிதாக இருக்கும். இந்தச் சூழலை ஊகித்துப் பெற்றோர்கள்தான் அவர்களை முன்கூட்டியே அதற்குத் தயார்படுத்த வேண்டும்" என்கிறார் மன்ஹாட்டனில் உள்ள குழந்தைகள் மன நலக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீவன் கர்ட்ஸ். அதேசமயம், "அவசரப்பட்டோ அதிக அளவிலோ அடிக்கடியோ அவர்களை இந்த மாதிரியான சூழல்களுக்குத் தயார்படுத்திக்கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் அவர்களால் சுயமாக இத்தகைய புதிய சூழலுக்குத் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியாமல் போய்விடலாம்" என்றும் அவர் எச்சரிக்கிறார். 

"கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை இன்னொரு குழந்தையோடு சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று பழக்கலாம். அமைதியான, சாதுவான அந்தக் குழந்தைகளைப் பக்கத்தில் அமர்த்தி சாதுவான குழந்தைக்கு ஆசிரியர்கள் நம்பிக்கை ஊட்டலாம்" என்கிறார் கர்ட்ஸ்.
"இதில் செய்யக் கூடாதது எதுவென்றால், கூச்சப்படாதே, அமைதியாக இருக்காதே என்று சதா அறிவுரை கூறுவதுதான்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மெரிகங்காஸ். "கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் போக்கை மாற்ற முயற்சிப்பதைவிட அதைப் புரிந்துகொண்டு உலகில் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைச் சொல்லித்தருவதுதான் நல்லது" என்று நம்பிக்கை தருகிறார் பிரகாசிக்கும் கண்களோடு!

தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்

தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு. 
 
தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத சிஆர்இ பாக்டீரியா. இதற்கு துர்க்கனவு பாக்டீரியா என்ற பெயரும் உண்டு. 
 
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 23,000 பேர் நோய்த் தொற்றுகளால் மட்டும் உயிரிழக்கின்றனர். நோய்த் தடுப்பு மருந்து மாத்திரைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டுப்படாத நோய்த் தொற்றுகளால் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு உடல்நலம் கெடுகிறது. இது இப்போது மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. எனவேதான், அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் முதல் முறையாக நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாதவற்றைப் பட்டியலிட்டுள்ளனர்.
"உயிரிழந்தவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைவிடக் குறைவாக இருக்கிறது. காரணம், தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்த் தொற்று இறந்தவர்களிடத்தில் இருந்தாலும் அதனால்தான் இறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பலருடைய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 

‘நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்ல மருந்துகளை நாம் தயாரித்தாலும், அந்த மருந்துகளால் பாக்டீரியாக்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பிறகு அது பல மடங்கு வீரியத்துடன் வந்து சமூகத்தைத் தாக்குகிறது. அப்போது சாதாரண நோய்த் தொற்றுக்கே மனிதர்கள் இறக்க நேரிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். எனவேதான், இப்போதைய உயிரிழப்புகள் கவனமுடன் ஆராயப்படுகின்றன. தோராயமாகக் கணக்கிட்டு இறப்பு எவ்வளவு என்று முன்னர் கூறிவந்தவர்கள் இப்போது துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கின்றனர்" என்று டப்ட்ஸ் பல்கலைக்கழக நுண்ணியிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் லெவி தெரிவிக்கிறார். நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவோடு பயன்படுத்துவதற்கான சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.
உலகமெங்கும் மருத்துவமனைகளில் ஏற்பட்ட நோய்த் தொற்றுகளால் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று 2007-ல் மதிப்பிடப்பட்டது. சிலவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டது. ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் பல பலனற்றுப் போய்விடவில்லை என்று இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்பில் வேண்டுமென்றே இறப்பைக் குறைத்துக் காட்டியிருப்பதாக டாக்டர் ஸ்டீவன் சாலமன் தெரிவிக்கிறார். "நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இறப்பு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்த இறப்புகளை மட்டும் கணக்கில் சேர்க்குமாறு கூறப்பட்டது" என்றார்.
அமெரிக்காவில் உள்ள பால், இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழி, வாத்து போன்ற பறவைப் பண்ணை களில்தான் 70% நோய்த்தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைச் சரியாக ஆராய அந்தப் பண்ணைகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நோய்த் தடுப்பு மருந்துகளைக் கால்நடைகளும் உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியை உண்ணும் மனிதர்களின் உணவிலும் அப்படியே உடலிலும் இவை சேருகின்றன. எனவே நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பிராணிகளுக்குப் பண்ணையில் நோய்த்தடுப்பு மருந்து நோய் வராமல் இருப்பதற்காக மட்டுமல்ல, வேகமாக வளர்வதற்காகவும் தரப்படுகிறது. 

இப்படி பிராணிகளுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் பெரும்பாலானவை அவற்றுக்குத் தேவையானவையே அல்ல, அத்துடன் பொருத்தமானவையும் அல்ல. மனிதர்களுக்குத் தரப்படும் நோய் எதிர்ப்பு மருந்து ரகங்களிலும் பாதிக்கு மேல் பொருத்தமானவை அல்ல.
பாக்டீரியாக்களில் 17-வகையும் ஒரு பூஞ்சையும்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமி வகை களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 பெரிய மருத்துவமனைகளிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன. "சி.ஆர்.இ. என்று பெயரிடப்பட்ட ஒருவகை பாக்டீரியா இப்போது அமெரிக்காவில் விற்கப்படும் எல்லாவகை நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வமானது ஆனால் ஆண்டுக்கு சுமார் 600 பேர் இதற்குப் பலியாகின்றனர். வியப்பு என்னவென்றால் இது அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியில் நாங்கள் தீர்வை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்று டாக்டர் மைக்கேல் பெல் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
"எம்.ஆர்.எஸ்.ஏ. என்று அழைக்கப்பட்ட நோய்த் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத மற்றொரு வகை பாக்டீரியாவின் தாக்குதலும் இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மருத்துவமனை அல்லாத பிற இடங்களில் இந்த நோய்த் தொற்று இரட்டிப்பாகிவிட்டது. அது மருத்துவமனைகளில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டது. மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்த லாம் என்றால் அவை வேறு இடங்களுக்குச் சென்று பரவுவது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அயோவா பல்கலைக்கழக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு துறையைச் சேர்ந்த எலி பெரன்சிவிச் தெரிவிக்கிறார். 

"கால்நடைப் பண்ணைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரில் 38% பேருக்கு எம்.ஆர்.எஸ்.ஏ. வகை பாக்டீரியாக்களின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


மிருதுவான தோல் அல்லது திசுக்கள் உள்ளவர்கள் இந்த பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றனர். இதற்குப் பண்ணைகளில் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளைவிட வேறு காரணங்களும் இருக்கலாம்" என்று இந்த ஆய்வுகளில் ஈடுபடாத ஆனால் தகவல் தெரிந்த ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய்த்தடுப்பு மருந்து மாத்திரைகள் விற்பனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரூபாய்களில் நடக்கிறது. டாக்டர்கள் தங்களுடைய அனுபவம், படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். 

ஆனால் அவற்றுக்கும் கட்டுப்படாமல் பாக்டீரியாக்கள் வலுப்பெற்று வருவதை இந்த ஆய்வுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கின்றன.
தி நியூயார்க் டைம்ஸ் தமிழில்: சாரி

Friday 28 November 2014

புற்றுநோய் பாதிப்பு: 3-வது இடத்தில் சென்னை!

 

தொற்றாத நோய்கள் (Non communicable diseases) தான் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் மருத்துவ அச்சுறுத்தல். இந்தத் தொற்றாத நோய்களில் ஒன்றான புற்றுநோய், சென்னை மக்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

நம் நாட்டில் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் (National Cancer Registry Programme) மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் பதிவேட்டை (Population Based Cancer Registry) வெளியிட்டிருக்கிறது. இதன் அடிப்படை நோக்கம், புற்றுநோய் தாக்குதலின் அளவை மதிப்பிடுவதுதான். இதன் மூலம் சமூகத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை புரிந்துகொள்ள முடியும்.

2006 முதல் 2008 வரையிலான 3 ஆண்டு காலத்தில் புற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னைப் பதிவேட்டில் இருந்து நமக்குத் தெரிய வருபவை:
2008 வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகள் பதிவானது. அதில், சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 15,258 புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சென்னையில் ஆண் புற்றுநோயாளிகளைவிட பெண் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். (ஆண்கள் – 7392, பெண்கள் – 7866).
இதன்படி, சென்னையில் உள்ள ஆண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 14-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 12-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

தூக்கம் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்: ஆய்வு

 
 
இரவில் நேரத்துடன் படுக்கைக்குச் செல்லாத குழந்தைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தூக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளே, பொதுவாக நேரத்துக்கு தூங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கண்பார்வை பாதிப்பில் முன்னிலை வகிக்கும் ஏழை நாடுகள்!

 
 
உங்கள் பார்வைதிறன் பற்றிய சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும், உடனடியாக கண் டாக்டரை பார்க்கத் தவறாதீர்கள். ஏனென்றால், கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து, கேடராக்ட் போன்ற எளிமையாக தீர்க்கக்கூடிய கண் பிரச்சினைகள் முதல் குளுகோமா போன்ற மோசமான பார்வை குறைபாடுகள் வரை, உரிய நேரத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப்படாததாலேயே மோசமான நிலையை எட்டுகின்றன.

உலக அளவில் 28 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்வைதிறன் பாதிக்கப்பட்டோ, இழந்தோ இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான். பொருத்தமான கண்ணாடியை அணிவதாலோ, கண் புரை நீக்க அறுவைசிகிச்சை மூலமாகவோ அவற்றை குணப்படுத்திவிட முடியும்.
பெரும்பாலான ஏழை நாடுகளில் கண் மருத்துவர்கள் பரவலாக இருக்கின்றனர். ஆனால் ஏழைகளும் கிராமவாசிகளும் கண் மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை அல்லது பார்ப்பதற்கான வசதி அவர்களுக்கு இருப்பதில்லை.

உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கண் மருத்துவர்களால் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களுக்கே, சேவை வழங்க முடிகிறது. அவர்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்.

பருக்கள் வருவது ஏன்?

 
 
இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. 

எது முகப்பரு?
 
நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது. 

மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும். 

பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம். 

எப்போது, எதற்கு வருகிறது? 

பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.
சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றலாம். ‘5 - ஆல்பா ரெடக்டேஸ்’ (5-Alpha -reductase) எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்தி, பருக்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறது. 

என்ன சிகிச்சை?
 
பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரைக் கவலைப்பட வைப்பது இந்த வகைத் தழும்புகள்தான். 

இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம். 

பருக்கள் வராமல் தடுக்க…
 
முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். 

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. 

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம். 

கொழுப்பு உணவு வேண்டாம்!
 
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா? இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

கட்டுப்படுத்த என்ன வழி?
 
எந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள். 

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!

 
 
அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?
பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.
சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.
சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.
சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.

Monday 24 November 2014

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???











ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???

எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது....
அது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...

PLU code (price lookup number) 

இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:

* PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...

* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

*P LU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்...

அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..!!

Friday 3 October 2014

மண் வாசனையுடன் ஒரு சுவை

மண் வாசனையுடன் ஒரு சுவை

 
 
கிராமம் என்றால் விடுமுறை காலத்தில் சென்று நல்ல காற்று, சுவையான உணவு ஆகியவற்றை அனுபவித்து வருவது அந்தக் கால வழக்கம். கிராமத்து உணவு வகைகள் சுவையிலும் ஊட்டச்சத்திலும் வித்தியாசமாக இருக்கும்.
நாம் மறந்துவிட்ட பாரம்பரிய உணவு வகைகள்தான் அவை. அது போன்ற மண் வாசனை மிகுந்த, ரசாயனமற்ற பொருட்களைத் தருவது ‘கிராமியம் இயற்கை அங்காடி’யின் சிறப்பு.
சென்னை அசோக் நகரில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அங்காடியில் உள்ள அனைத்துப் பொருட்களும், மாதிரிக்கு சுவைத்துப் பார்க்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுவது புதுமை. அரிசி,சிறுதானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும் கிடைப்பது மட்டுமில்லாமல், அவற்றைச் சுவையான முறையில் சமைத்துச் சாப்பிடத் தேவையான மண்பாண்டங்களும் கிடைக்கின்றன. அந்த வகையில் ஒரு முழுமையான கிராமத்து உணவை நகரத்தில் உள்ளவர்களுக்கும் கொண்டுவருகிறது கிராமியம் இயற்கை அங்காடி. 

பாரம்பரிய மறுபிறப்பு
 
"திருநெல்வேலி தோணித்துறையில் பிறந்து வளர்ந்ததால் இயற்கையாகவே விவசாயத்தைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரிந்திருந்தது.
சாப்பாடு எப்படி விஷமாக மாறிவருகிறது என்பது புரிந்த பிறகு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
எல்லா மக்களுக்கும் அந்தக் கருத்து சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமியம் அங்காடியைத் தொடங்கினேன்.
இங்கே பாரம்பரிய விதைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதுபோன்ற பாரம்பரிய முறைகள் நம் கண் முன்னே மறுபிறப்பு எடுப்பது சந்தோஷத்தைத் தருகிறது" என்கிறார் கடையின் உரிமையாளர் தாமோதர கண்ணன்.


புதுமைப் பொருட்கள்
 
இங்குக் கிடைக்கும் பனையோலைப் பெட்டிகள் சிறு வயது ஞாபகங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. வித்தியாசமான பொருட்களின் வரிசையில் துணிகளைப் பாதுகாப்பான முறையில் சலவை செய்ய சலவைப் பொடி , பெண்களுக்குச் சணல் பை, சிறுதானிய லட்டு போன்றவை கிடைக்கின்றன.
பிளாஸ்டிக் , காகிதப் பைகளை மறுசுழற்சியும் செய்கின்றனர். இது மட்டுமல்லாமல் சிறுதானிய உணவு வகைகளின் செய்முறைகளையும் கற்றுக்கொடுக்கின்றனர்.
"விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் நிலத்துக்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு எங்களுடைய திருநெல்வேலி, ஆரணி விவசாய நிலங்களில் உதவி செய்ய அழைக்கிறோம்" என்கிறார் தாமோதர கண்ணன்.
சிறப்பான பொருட்கள்: பதினைந்து அரிசி வகைகள்
தொடர்புக்கு: 097 90 905559/ https://www.facebook.com/gramiyam/info
-பார்க்கவி பாலசுப்பிரமணியன்

 

Saturday 20 September 2014

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

 

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

 

  

உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும்.


இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் உள்ளன. இதை தினமும் தொடர்ந்து 2 மாதம் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.

1. முதலில் ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக அமர்ந்த நிலையில் உங்கள் உதடுகளை மூடிக்கொள்ளுங்கள். பிறகு இரு கன்னங்களையும் உறிஞ்சுவதைப்போல் கன்ன சதையை உள்பக்கமாக இழுங்கள். அதன் பின் இழுத்த கன்னங்களை விடுவிக்க வேண்டும்.  முதலில் ஒரு பக்கம் செய்து பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு 15 முறை செய்த பின்னர் சில விநாடிகள் ஓய்வு எடுத்து இரு கன்னங்களுக்கும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அதே 15 முறை செய்ய வேண்டும்.

2. உங்களுடைய வாயில் எவ்வளவு காற்றை நிரப்பிக் கொண்டு மூட முடியுமோ அவ்வளவு காற்றை நிரப்பி கொள்ளுங்கள்.  சில நிமிடங்கள் காற்று வெளிவராதவாறு மேல் உதடைக்கொண்டு மூடவும். பிறகு வாயை மூடியவாறே இடது மற்றும் வலது பக்கம் கன்னங்களுக்கு காற்றை நகர்த்தவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

3. உங்கள் உதடுகளை மூடவும். பிறகு உங்களுடைய கன்னங்களின் சதையைக் கொண்டு உதடுகளை சுருக்கவும். அதன்பின் சுறுக்கிய உதடுகளை சில நிமிடங்களுக்கு பிறகு விட்டுவிடவேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

- இந்த பயிற்சிகளை காலையில் செய்தால் தான் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முதல் பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.  

அமர்ந்தே இருந்தால் ஆபத்து!

 அமர்ந்தே இருந்தால் ஆபத்து!












இன்றைய நவீன உலகில் உடல் உழைப்புப் பணிகள் குறைந்து, மூளை உழைப்புப் பணிகள் அதிகரித்திருக்கின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் பணிநேரம் முழுக்க நாற்காலியை விட்டு நகர முடியாமல் இருக்கிறது.

இது உடலுக்கு கஷ்டம் கொடுக்காததைப் போலத் தோன்றினாலும், உட்கார்ந்தே செய்யும் பணியால் டென்ஷன், முதுகு வலி, அஜீரணக் கோளாறு என்று பல்வேறு பிரச்சினைகள் வரிசை கட்டி வருகின்றன.

ஆனால், ஓடியாடி உழைக்கும் வகையில் நாம் நமது பணியை திடீரென மாற்றிக்கொள்ளவும் முடியாது. எனவே அமர்ந்திருக்கும் பணியானாலும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளும் வகையில் என்னென்ன செயல்களை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்த உடனே, ஒரு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு வேலையை தொடங்கினால் படபடப்பு குறையும்.

மறுபடி, வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்சாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் தணியும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்துக்கு  ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். இதை தவிர்க்க, அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும்.

* தொடர்ந்து கணினி திரையை வெறித்துக்கொண்டிருக்கும்போது நம்மையும் அறியாமல் கண்சிமிட்டுவது குறைந்து, கண்ணில் ஈரப்பதம் குறையும். எனவே, கவனத்தோடே கண் சிமிட்டலாம்.

* கண்களை கணினித் திரையை விட்டு அவ்வப்போது விலக்கி, சற்றுத் தொலைவில் உள்ள வேறொரு பொருளைப் பார்க்கலாம்.

* கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேரச் சிற்றுண்டிக்கு எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும்.

ஆரோக்கியத்தைக் காட்டும் நகங்கள்

ஆரோக்கியத்தைக் காட்டும் நகங்கள்

 

 
 
 
 நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடிகள் என்றால் மிகையில்லை. நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை அவை காட்டிக்    கொடுத்துவிடும்.

உதாரணத்துக்கு, சிலநேரங்களில் சிலரது கை விரல் நகங்கள் வழக்கத்துக்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்தத் திடீர் மாற்றம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். உடனே மருத்துவரை அணுகுவதுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை மற்றும் உணவுகளை உட்கொள்வது நலம்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி அழுக்காக இருப்பதுபோல் தோன்றும். இது ‘பங்கஸ்’ எனப்படும் பூஞ்சைப் பாதிப்பாகும்.

கைவிரல் நகம் நீல நிறத்தில் இருந்தால் ‘சயனோசிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறது என்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும்.

சருமத்தைப் போல சில சமயங்களில் நகம் அதிகமாகக் காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.

இப்படி ஓர் எச்சரிக்கை செய்யும் கருவியாக உள்ள நகங்களை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதாவது, மண்ணைத் தோண்டுவது, பழங்களின் தோல் உரிப்பது, எதையாவது சுரண்டுவது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்தச் செயல்கள் எல்லாம் நகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமித் தொற்று ஏற்படவும் காரணமாகும்.

வேதிப்பொருட்கள் சேர்த்த நகப்பூச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சமையல் அறை, பசை மற்றும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது கையுறை அணிந்துகொள்ள வேண்டும்.

நகங்கள் தேவையில்லாமல் வளர்கின்றன என்று நினைக்க வேண்டாம். இவை விரல் நுனிகளுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன.

கெரட்டின் என்னும் கழிவுதான் நகமாக வளர்கிறது. நகங்களும் சுவாசிக்கும் என்றால் நம்ப மாட்டீர்கள்தானே? ஆனால் அது  உண்மை.

நகங்களைக் காப்பதன் மூலம் நாம் நமது நலத்தைக் காத்துக்கொள்ளலாம்.
 
 
 
 

Friday 19 September 2014

இளமையிலேயே வயதானது போல் மாறுகிறதா முகம்: தடுக்கும் முறை என்ன?

இளமையிலேயே வயதானது போல் மாறுகிறதா முகம்: தடுக்கும் முறை என்ன?

 


உங்கள் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் தென்படுகிறதா? உங்கள் முகத்தில் இளமையை பாதுகாக்கும் ஒரு அழைப்பாக இந்த உணவுபத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள். முகங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டால் பெரும்பாலான பெண்கள் உடனே பீதி அடைந்து அருகில் உள்ள  கடைகளுக்கு சென்று முகப்பொலிவு கொடுக்கும் தயாரிப்புகளை தேடி அலைகிறார்கள்.

வயதானது போன்ற தோற்றம் இளம் வயதிலேயே வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை, விருப்பங்கள் உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே வயதானது போல் சிலருக்கு முகங்களில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.  இதை உணவு கட்டுப்பாடு மூலம் இதை கட்டுபடுத்த முடியும். எனவே  கடைகளுக்கு செல்வதற்கு முன் உங்கள் சமையலறைக்கு சென்று கீழ்கண்ட உணவு கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். இது உங்களை ஆரோக்கியமாகவும் இளைமை தேற்றத்துடன் வைக்க உதவலாம்

கீரைவகைகள்,

பச்சை இலை காய்கறிகள் குறிப்பாக கீரைகளில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை வயதான தோல் அடைவதை தடுக்கும் சக்தி கொண்டது. எனவே உங்கள் உணவில் கீரையை சேருங்கள்

சியா விதைகள்:

சியா விதைகள் உங்கள் தோல்களில் நலனுக்கு மிகவும் அவசியமானது. இவை உங்கள் முகத்துக்கு பிரகாசத்தை அளித்து உங்களை இளைமை பொலிவோடு வலம் வருவதற்கு உதவும்.

தக்காளி பழங்கள்

தக்காளி பழங்காளில்  லகோபீன் மற்றும் வலுவான வயது எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால் சூரிய வெளிச்சம், சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட வெளிப்புற தாக்குதல்களில் இருந்து உங்கள் தோலுக்கு மிகுந்த பாதுகாப்பு அரணாக விளங்கும்.

பாதாம்

பாதாம் விட்டமின் ஈ சத்துக்களை கொண்டது.இதன் காரணாமாக இது உங்கள் தோல் சேதத்தை இது தடுக்க உதவும்.மேலும் இளமையை மீட்டெடுக்க இது மிகவும் உதவும். தண்ணீரில் ஊறவைத்த பாதமை சாப்பிடுவது உங்கள் தோல் சுகாதாரத்தை பேணிக்காக்க உதவும்.

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.

 

 


உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ்  என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம்

ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம்

 

 ஆயுள் கூட மூன்றாம் பிறை தரிசனம் 

 

 அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

எந்த நாளில் மூன்றாம் பிறை வரும் என்பதில் சந்தேகம் இருந்தாள் பஞ்சாங்கம் மற்றும் காலண்டரை பாருங்கள். அதில் வளர்பிறையில், சந்திர தரிசனம் என்று போட்டிருக்கும். அந்நாளில் ஸந்தியாகாலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தரிசித்தால் ஆயுள் கூடும்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை அல்லது ஆயிரம் பெளர்ணமி பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது.

ஒரு மூன்றாம் பிறையை கூட விடாமல் பார்த்திருந்தால் தன்னுடைய 84 வயது ஆகும் போது ஆயிரம் பிறையை பார்த்திருக்கக்கூடும் என்பதாகும்.

நூறு வயது ஆனத்திற்குச் சமமாக ஆயிரம் மூன்றாம் பிறை பார்த்தவர்கள் 84 வயதை கடந்தவர்கள் ஆவர். அதனால் இவர்கள் சதாபிஷேகம் என்னும் நற்சடங்கினை செய்து கொள்ளும் தகுதியை அடைகிறார்கள்.

ஆதலால் அனைவரும் மூன்றாம் பிறையை தரிசித்து தங்களுடைய ஆயுளை கூட்டிக் கொள்ளுங்கள்.

2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்


2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்

 2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்


கோவை, செப்.19–
தண்ணீர் பற்றாக் குறைகள், பிரச்சினைகள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த சொற்பொழிவு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பொன் விழா அரங்கில் நடைபெற்றது.
நீர்நுட்பவியல் இயக்குனர் பாண்டியன் வரவேற்று பேசினார். முனைவர் சிவனப்பன் தன்னுடைய நீர் ஆராய்ச்சி முடிவுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் நீர் வீணாவதை தடுக்க சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன முறைகளையும், நீரை அதிக அளவில் தேக்கி வைக்கும் விஞ்ஞான முறைகளையும் வலியுறுத்தினார்.
வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி பேசும்போது நீரை உபயோகிக்கும் முறையில் 3 சதவீகித வேறுபாடுகள் காணப்படுவதால் 52 சதவீகிதம் நீரை பயன்பாட்டுக்கு கிடைக்கக் கூடியதாக இருப்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காருண்யா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் பேசியதாவது:–
தண்ணீர் பயன்பாடு மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும். தண்ணீரை சேகரிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். துபாய், பிரேசில் உள்ளிட்ட மேல்நாடுகளில் தண்ணீர் மேலாண்மை மிகவும் சிறப்பாக கடைபிடிப்பதால் தனிப்பட்ட மனிதனின் தண்ணீர் தேவை பாராட்டத்தக்கதாக இருக்கிறது. இந்தியாவில் கங்கை மற்றும் யமுனை நதிகள் அதிக அளவு நீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. சரஸ்வதி போன்ற நதிகள் இங்கு இல்லாமல் போய்விட்டது. மழையளவு குறையாவிட்டாலும் அது எல்லா இடங்களிலும் பரவலாக பெய்யாத நிலையில் தண்ணீர் பாதுகாப்பு 2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும்.
இந்தியா, கிழக்கு ஆசியா, சீனா, வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையில் மிகவும் பாதிக்கப்படுவதோடு அகில உலக அளவில் தண்ணீருக்காகவே போராட்டம் மற்றும் முரண்பாடுகள் நாடுகளுக்கிடையே அதிகரிக்கும். கொலராடோ போன்ற நாடுகளில் ஒரு துளி தண்ணீர் கூட பகிர்ந்து கொள்ளாத நிலையில் தண்ணீர் தேவை 4 மடங்கு அதிகரித்ததோடு சராசரி நீர் தேவை அனைவருக்கும் கிடைக்காமல் இருக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 200–க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டலில் சாப்பிடாதீர்கள்

ஓட்டலில் சாப்பிடாதீர்கள் 

 

 

வீட்டில் அம்மாவோ, மனைவியோ செய்கிற இட்லியை ரப்பர் பந்துக்கும், தோசையை வரட்டிக்கும் ஒப்பிட்டுக் கிண்டலடித்துக் கலாய்க்காதவர்களே  இருக்க மாட்டார்கள். ‘இட்லி, தோசையை விட்டா வேற ஒண்ணுமே கிடையாதா?’ என அலுத்துக் கொள்கிறவர்கள், வெளியே ஓட்டலுக்கு சென் றால் முதலில் ஆர்டர் செய்வதும் அதே இட்லி,தோசையாகத்தான் இருக்கும்.

‘வீட்ல இப்படி பஞ்சு மாதிரி வெள்ளை வெளேர்னு இட்லி வருதா? முறுகலா,பொன்னிறமா தோசை செய்யத் தெரியுதா’ என அங்கேயும் வீட்டுச் சாப்பாட்டை கேலிப் பொருளாக்கத் தவறுவதில்லை நாம். பஞ்சு போன்ற வெள்ளை வெளேர் இட்லிக்கும், முறுகலான, பொன்னிற தோசைக்கும், இன்னும் சுளை சுளையான பரோட்டாவுக்கும், மிருதுவான  சப்பாத்திக்கும் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் தெரிந்தால் ஓட்டல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டீர்கள்!

இட்லிக்கு மாவரைக்கும்போது பழைய சாதத்தைக் கலந்து அரைக்கிறார்கள். பழைய சாதம் ஆரோக்கியமானதுதானே என்று நினைக்கலாம்.  ஆனால், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்களுக்கு இந்த இட்லி நல்லதில்லை. கோதுமையின் கழிவுப்பொருள்தான் மைதா. மைதா உணவுப்  பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றே பலரும் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்த மைதாவில்தான் விதவிதமான பரோட்டா செய்கிறார்கள்.  குறிப்பாக, நாம் விரும்பி சாப்பிடும் தோசை முறுகலாக வர கடலை மாவும் சர்க்கரையும் சேர்க்கிறார்கள். நீளமாக, மெலிதாக வரக் காரணம்  தோசை மாவில் பாதிக்குப் பாதி சேர்க்கப்படுகிற மைதா. சப்பாத்தியிலும் இதே கதைதான்!

‘‘ஓட்டல் உணவுகளில் முக்கியமாக நான்கு ஆபத்துகள் இருக்கின்றன’’ என்ற சஸ்பென்ஸோடு ஆரம்பிக்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை  நிபுணரான பாசுமணி. ‘‘இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுகள் அதீத வண்ணங்களோடோ, கவர்ச்சிகரமாகவோ இருப்பதில்லை. இதனால் மக்களைக்  கவர வேண்டும் என்பதற்காகவே ஓட்டல்களில் செயற்கையானநிறமிகளை (Colouring agents) சேர்க்கிறார்கள். இந்த நிறமிகள் தோல் அழற்சி, குடல் அழற்சி, ஆஸ்துமா, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது, எலும்புக் குறைபாடுகள் என பல பிரச்னைகளை ஏற்படுத்துபவை.

இரண்டாவது, வீட்டில் பயன்படுத்துவதைவிட உப்பு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள்    தேவைக்கதிகமாக உப்பு பயன்படுத்துவதாலேயே ஏற்படுகிறது.  மூன்றாவது அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய். நல்ல  கொழுப்பை (Polyunsaturated fat) தரும் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில் சமைத்த  உணவில் பிரச்னையில்லை. ஆனால், கெட்ட கொழுப்பை உண்டாக்கும் (Saturated fat) டால்டா, நெய், திருப்பித் திருப்பி சூடாக்கப் பட்ட எண்ணெய், மிருகக் கொழுப்பில் இருந்து கிடைக்கும் வெண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் ஆபத்தானவை. 

உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு,   பக்கவாதம் என்று பல நோய்களை ஏற்படுத்துபவை.  இயல்பாகவே,  கார்போஹைட்ரேட் என்கிற மாவு உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கிறோம். இதனால், கொழுப்போடு அதிகம் சேர்க்கிற மாவு  உணவுகளும் சேர்ந்து இரண்டு பக்கமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தம் அதிகமான, உடல் உழைப்பு குறைவான வேலை செய்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். இந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு இந்த  இரண்டும் ஏற்படுத்தும் நோய்கள் அதிகம்.

நான்காவதாக ஓட்டல் உணவுகளில் அதிகம் இருக்கும் இனிப்பு. ஸ்வீட் வகைகளில் மட்டும்தான் அதிக இனிப்பைச் சேர்க்கிறார்கள் என்று இல்லை.  சாதாரணமாக ஜூஸ்வகைகளில் கூட அதிக சர்க்கரை சேர்த்துத்தான் கொடுக்கிறார்கள். ஓட்டல் காபியில் டம்ளரின் அடியில் சர்க்கரை நிறைய இருப்பதைப் பார்க்க  முடியும். இந்த அதிகப்படியான சர்க்கரையும் கெட்ட கொழுப்பாகவே மாறுகிறது.  இந்த காரணங்களோடு முக்கியமான இன்னொரு காரணம் சுகாதாரம்... ஓட்டலில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பலவியாதிகள் சுத்தமில்லாமல் உணவைக் கையாள்வதாலேயே வருகிறது.

தவிர்க்க முடியாமல் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால், தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்துக்காக கொஞ்சம் மெனக்கெடு வதோ, செலவு செய்வதிலோ தவறு இல்லை. சூடான உணவுகளை சாப்பிடுவது ஓரளவு பாதுகாப்பானது. சாலட், ஜூஸ் மற்றும் ஆறிப்போன  உணவுகளில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு அதிகம். பொரித்த உணவுகள், உப்பு அதிகமாக இருக்கிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. முடிந்த வரை அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள்தான் நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சாதாரணமாகவே,லாப நோக்கத்தோடு கலப்படப் பொருட்களையும் தரமற்ற பொருட்களையும் பயன்படுத்துகிறவர்கள், அசைவ உணவில் என்னென்னவெல்லாம்  செய்ய வாய்ப்பிருக்கிறது என்பது பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

தரமான இறைச்சியாக இருந்தால் கூட மாதக்கணக்கில் இறைச்சிகளைப் பத்தி ரப்படுத்தி வைக்கும் வசதி வந்துவிட்டது. இறைச்சி மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்பிரின், நோவால்ஜின், பாரசிட்டமால் போன்ற  மாத்திரைகளைச் சேர்த்து சமைக்கிற கொடுமையெல்லாம் நடக்கிறது. அதனால், வெளியிடங்களில் அசைவத்தை தவிர்ப்பதே சிறந்தது’’ என்று எச்சரிக்கிறார் பாசுமணி.

ஓட்டல்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் என விளக்குகிறார் திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பாளர்சங்கரலிங்கம்...
‘‘உணவகங்கள் முற்றிலும் வணிகமயமானவை. பணமே அங்கு பிரதானம் என்பதால் உணவுப் பொருட்கள் மற்றும் உணவின் மூலப்பொருட்கள் என  அனைத்திலும் கலப்படம் செய்கிறார்கள். முழு சாப்பாடு வழங்கும் உணவகங்களை பலரும் விரும்பிச் செல்வதற்கான காரணம் வயிறார சாப்பிட முடியும் என்கிற எதிர்பார்ப்புதான். ஆனால், குறைவான அளவு சாப் பிட்டதுமே வயிறு நிறைந்துவிடுகிறது. காரணம், சாப்பாடு தயார் செய்யும்போது
அதனுள் சுண்ணாம்புக்கட்டி, களிப்பாக்கு, சோடா உப்பு ஆகியவற்றை கலந்து விடுவதுதான்.

இனிப்பு பண்டங்களில் சேர்க்கப்படும் கேசரி பவுடர்  100 பி.பி.எம். (Parts Per Million) அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், 200 முதல் 400 பி.பி.எம். அளவு வரை நிறத்துக்காக  சேர்க்கின்றனர். கார உணவுப்பொருட்களில் நிறத்துக்காக ஸிலீஷீபீணீனீவீஸீமீ ஙி என்னும் ரசாயன பவுடரை சேர்க்கின்றனர். இன்று துரித உணவகங்கள் என்ற பெயரில் வேற்று நாட்டு உணவுகள் நிறைய கிடைக்கின்றன. இந்த உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கென மோனோ சோடியம் க்ளூட்டமைட் (விஷிநி) பயன்படுத்துகிறார்கள். இந்த   விஷிநி உணவுப் பொருட்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எவ்விதத் தடையுமின்றி விற்கப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் தேநீரின் மூலப்பொருளான டீத்தூளிலும்  கலப்படம் இருக்கிறது.

பயன்படுத்தித் தூக்கிப் போடுகிற டீத்தூளை காய வைத்து, துணிக்குப் போடும் சாயத்தைக் கொண்டு நிறமேற்றி, புதிய டீத் தூள் போல் மீண்டும் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். உயர்தர உணவகங்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய், தயாரிப்பு  முடிந்த பின்னர் மலிவான விலைக்கு மற்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது’’ என்று வரிசையாகப் பட்டியலிடுகிறார்.இது போன்ற கலப்பட உணவுகளை உண்ணும்போது என்னென்ன ஊட்டச்சத்துக் குறைபாடு   ஏற்படும்? என்று உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘‘இட்லி மென்மையாக இருக்கக் கலக்கிற சோடா உப்பு உடலுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் பி ஊட்டச்சத்தை கிடைக்கவிடாமல் தடை  செய்யும். அது மட்டுமில்லாமல், அசிடிட்டி, அல்ஸர் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். சுவைக்காகச் சேர்க்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோ  சோடியம் க்ளுட்டமைட் பசியின்மை, நரம்புத்தளர்ச்சி, அஜீரணம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இனிப்பு பண்டங்களில் கேசரிப் பவுடர்  கலப்பது வயிற்று வலியையும், புண்களையும் ஏற்படுத்தும். இந்தக் கலப்படம் புற்று நோயை உண்டாக்கவும் காரணியாக இருக்கிறது.

மொத்தத்தில் நாம் குடிக்கிற தண்ணீரில் இருந்து கடைசியாக மெல்லும் சோம்பு வரையில் ஓட்டல் உணவுகளில் இருக்கும் ஆரோக்கியக் கேடுகள்  நிறைய. முடிந்தவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்று அதிர்ச்சி கிளப்பினார். எப்போதாவது ஓட்டலில் சாப்பிடுவதே ஆரோக்கியக் கேடு என்றால், ஓட்டலில் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால்... கடவுளே!

Thursday 18 September 2014

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

 

 இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

 

 

அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.

* இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.

* இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.

* கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.

* பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம்.

வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப்படுத்தும் இருமலில் இருந்து விடுபடலாம். 

Wednesday 17 September 2014

ஏன் வேண்டும் யோகா இன்று?

ஏன் வேண்டும் யோகா இன்று?

 

 
 
 
 
உண்மையில் இன்றுள்ள வாழ்க்கைச் சூழலுக்கு யோகாவைப் போன்ற சரியான பன்முனை நிவாரணியைச் சொல்ல முடியவில்லை.
பல இடங்களுக்குச் சென்று பலவிதமான உடல்-மன பயிற்சிகளைச் செய்தவர்கள் யோகாவை அனுபவித்த பிறகு சொன்னது அது.
உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று பல தளங்களில் யோகா வேலை செய்யும்போது கிடைக்கும் அனுபவம் வியப்பாகத்தான் இருக்கும்.
பல நேரம் அது மாயமாகச் செயல்படுவதாகச் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். அதற்குக் காரணம், பல நிலைகளில் அது வேலை செய்து, முழுமையாய்த் தரும் பலன்கள் பேரானந்தத்தைப் போன்றவை.
உடற்பயிற்சியும் யோகாவும்
நம் நாட்டைப் பொறுத்தவரை தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் குறைவு. உடலுக்கு எந்த விதமான பயிற்சியையும் தராததால் தசைகள் இறுகிப் போயிருக்கும். பிடிப்பு அதிகம் இருக்கும். பல வலிகள் இருக்கும், இதனால் மூச்சின் (உள்-வெளி) அளவு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.
ஆகவே, மனம் ஒரு நிலையில் இருக்காது, ஆடி ஓடி விளையாடும். ஒரே நேரத்தில் பல எண்ணங்கள் மனதில் சுழலும். அவை கன்னாபின்னாவென்று அலைபாய்ந்து இடையூறாக மாறி எரிச்சல், கோபம், மன அழுத்தத்துக்குத் தாராள இடம் தரப்பட்டிருக்கும்.
இதனால், பல உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. உறக்கம் சரியாக இருக்காது, செரிமானம் சரியாக இருக்காது, அமைதியை உணர முடியாது.
அதனால் தேவைப்படும் சக்தி இருக்காது, எண்ணங்கள் ஆரோக்கியம் குறைந்து, எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றங்கள் இருக்கும். மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.
இதனால் குடி, புகைப் பழக்கம் முதலானவை இருக்கலாம். சிலர் கடும் எரிச்சல்காரராக மாறியிருப்பார்கள். சந்தேகமும் அவநம்பிக்கையும் கூடும்.
இப்படிப்பட்டவர்களின் நட்பு வட்டம், தினசரிப் பழக்கவழக்கம் எப்படி இருக்கும்? எண்ணங்கள் எப்படி இருக்கும்? தங்கள் மீது நேசிப்பும் மதிப்பும் இருக்குமா? அப்படியென்றால் பிறர் மீது?
என்ன கிடைக்கும்?
ஒருவர் சுயமாக தன்னைச் சரியான முறையில் கவனித்துக்கொள்ளவில்லை எனில், எது வேண்டுமானாலும் நிகழலாம். இது ஒரு நாளில், ஒரு மாதத்தில் நடப்பதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் வளரும் பழக்கம்.
ஒரே மாதிரியான எண்ணங்கள், இயல்புகள், பலவீனங்கள் மெல்ல வளர்ந்து பெரிய சக்தியாக மாறிப் பிறகுதான் வெளியே வருகிறது. நினைத்தால் எந்த நேரத்திலும் நாம் நம்மை சரி செய்துகொள்ள முடியும். ஆனால், அதற்கான விலையைத் தந்தாக வேண்டும்.
இப்படியெல்லாம் பல நிலைகளில் பலவற்றை வளர்த்துக்கொண்ட மனிதர்களுக்கு யோகா போன்ற முறைமைகள்தான் சரியான பயிற்சியாக இருக்க முடியும்.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது அவர்களின் உடல் அசைவினால் ரத்த ஓட்டம் சீராகும், மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறும், இதயம் நன்கு வேலை செய்யும், புத்துணர்ச்சி கிடைக்கும் என்று சொல்லலாம்.
அதே மாதிரி ஜிம் போகிறவர்கள் பெரும்பாலும் உடலை வலிமையாக்கப் போகிறார்கள். எடையைக் குறைக்கப் போகிறார்கள். கராத்தேயால் உடலுக்கு வலிமை, மனதுக்கு வலிமை கிடைக்கும். இப்படிப் பலவற்றையும் சொல்லலாம். ஆனால், இவற்றைத் தொடர்ந்து செய்து வாழ்க்கையில் மாறியவர்கள் மிகவும் குறைவு.
இந்தப் பயிற்சிகள் உடல் அளவில் செய்கிற மாற்றங்கள் தான் கூடுதல். மனதளவில் தேவையான மாற்றங்கள் நடப்பதில்லை. அதனால் அதுவே ஒரு பழக்கமாகி, இயந்திரத்தனமாக மாறிவிடுகிறது. பலன்களும் குறைந்துவிடுகின்றன. யோகாவையும் அவ்வாறு செய்தால், பெரிய பலன் இருக்காது. மனதை அலையவிட்டு, உடற்பயிற்சி போல் அதையும் மாற்றிவிட்டால் என்ன பலன் தேறும்?
ஆசிரியரின் பங்கு
மூச்சு குறித்த கவனத்தோடு ஒவ்வொரு ஆசனத்தையும் செய்வதே சிறந்த முறை. ஆசனத்துடன் மூச்சுப் பயிற்சி இல்லாமல் இருப்பதால், மனம் பெரும்பாலும் பயிற்சியின் மீது கவனமாக இருப்பதில்லை.
கடினமான ஆசனங்களை முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது மனம் பயிற்சியுடன் இருக்கும், அதுவே நீண்ட நாட்கள் செய்யும்போது, நன்கு பழகிப்போகும்போது, மனம் வெளியில் பறந்துவிடுகிறது.
யோகாவை எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், இதில் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
பயிற்சி செய்பவர்களின் இயல்பு, எண்ணங்கள், பயிற்சி, ஈடுபாடு, யோகாவைப் பற்றிய புரிதல், அறிவு முதலானவை நிறைவாக அமையும்போது, அந்த யோகா வகுப்பு மிகச் சிறப்பாக - பலன் தருவதாக அமையும்.
ஆகவே ஒரு யோக முறையை, ஒரு யோகா ஆசிரியரை உங்களுக்கு ஏற்ப நீங்கள் தேட வேண்டும். அவ்வாறு முயற்சி எடுக்கும்போது, யோகாவின் பல அணுகுமுறைகளை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
பயிற்சி எதுவரை?
பயிற்சியைச் செய்கிறபோது, மகிழ்ச்சியாய்ச் செய்யுங்கள். ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வீடு-அலுவலகம் போன்ற சுய விஷயங்களை மனதுக்குள் இருத்தாமல் செய்யுங்கள்.
நிகழ்காலத்தில் இருந்து செய்யுங்கள். புரிந்து, உணர்ந்து செய்யுங்கள். பலன்கள் தேடிவரும்.
பலன்கள் கிடைத்ததும் சிலர் பயிற்சியை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால், சிறுசிறு பலன்களைப் பெறவே அவர்கள் யோகாவுக்கு வந்திருப்பார்கள்.
உடல் வலி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, தூக்கம் இன்மை, வயிறு சரியில்லை, முட்டி வலி, மனம் ஒரு நிலைப்படவில்லை, மனஅழுத்தம், வயிறு பெருத்துத் தொலைத்துவிட்டது... என்று. அந்தப் பிரச்சினை சரியானதும், வர மாட்டார்கள். பிறகு வேறு பிரச்சினை வரும்போது, திரும்பவும் வருவார்கள்.
யோகா செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களில் மனம் அமைதியடையும், எண்ணங்கள் சீர்படும். ஆகவே எரிச்சல் குறையும், தூக்கம் சுகமாகும், நாள் முழுதும் சக்தி கிடைக்கும், மகிழ்ச்சி அதிகமாகும்.
நாள்தோறும் பயிற்சியைத் தொடங்கும்போது அவர்களுக்குள் அமைதி ஏற்படும். விஷயங்களை அழகாக, சரியாக யோசிக்க அந்த அமைதி துணை செய்யும்.
மெல்ல மெல்ல நீண்ட நாள் உடல் இறுக்கம் குறையக்கூடிய, மூச்சுப் பயிற்சி தரமானதாக-கவனமானதாக மாறமாற மகிழ்ச்சி கூடும். உடல் கனத்து இருந்ததிலிருந்து இலகுவானதாக மாறும். செரிமானம் நன்றாக இருக்கும். உள் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.
உருமாற்றம்
வேறு என்ன பலன்கள் இருக்கும்? உள் உறுப்புகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, உடலில் ஓர் அழகு, முகத்தில் தெளிவு என்று வளர்ந்துவரும் பட்டியலில் உங்களைப் பற்றியும் செய்யும் வேலைகள் பற்றியும் யோசிப்பீர்கள்.
என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எங்கு நிறைவாகச் செய்கிறோம், எங்கு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது, முன்னேற வேண்டியுள்ளது என்றெல்லாம் எண்ணங்கள் செம்மையடையும். இந்தக் கட்டத்துக்கு முன்பே பிறரை நேசிக்கும் ஒரு பண்பு வரும்-இயல்பு வரும்.
யோகா உடலின், மனதின் தொடப்படாத இடங்களைத் தொடும். அந்தப் பகுதிகள் தொடப்படும்போது, புதிய பரிமாணங்கள் நம்மிடம் வெளிப்பட வாய்ப்பு உண்டு. அது உடல் அளவில், மூச்சு அளவில், மன அளவில், ஆளுமை அளவில் எனப் பல நிலைகளில் ஏற்படலாம்.
பயிற்சியில் கிடைக்கும் தரத்தைச் சிலர் தங்களின் வாழ்வுக்கும் மாற்றிவிடுவார்கள். அதாவது உடல், மூச்சு, மனம், ஆளுமை என்று வேலை செய்யும்போது ஆசனத்தோடு மூச்சு, ஒலி, ஒலியுடன் எண்ணிக்கை, ஒலிக்கும் முன்போ-பின்போ மூச்சை நிறுத்துதல் என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பயிற்சியில் சிறக்கும்போது, அந்த அனுபவத்தை வாழ்க்கைக்கு மாற்றும் வாய்ப்புள்ளது.
யோகா உங்களுக்கு நிறைவான பலன்களைத் தரவில்லை என்றால், ஒன்று சரியான யோகா முறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டீர்கள் அல்லது சரியான ஆசிரியர் கிடைத்திருக்க மாட்டார். அல்லது நீங்கள் தொடர்ச்சியாக, சரியாகப் பயிற்சியைச் செய்திருக்க மாட்டீர்கள்.
யோசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும். பயிற்சியைச் சரியாகத் தொடருங்கள், வாழ்க்கை மாறும்.

 

விக்கல் வருவது ஏன்?

விக்கல் வருவது ஏன்?

ஓவியங்கள்: வெங்கி
 
 
 
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.
என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.
இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
நிறுத்த என்ன செய்வது?
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.
அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்!
-கட்டுரையாளர்,பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

 
என் அப்பாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார். டிமென்ஷியா, அல்சைமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். மருந்துகள் உட்கொண்டாலும்கூட, அவரது அன்றாட நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நலம் பெற வைக்க முடியாதா?
- சுப்பிரமணி, தஞ்சை 

ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம்.
வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். Alzheimer's என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.
மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia. இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.
பாதிப்புகள்
இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.
பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.
அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு
மனச்சோர்வு
நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு. எதிர்மறை எண்ணங்கள், தனிமையை விரும்புதல், பசி உணர்வு குறைதல், தூக்கமின்மை, உடல் பலவீனம், நம்பிக்கையின்மை, வாழ்வதே அர்த்தமற்றது என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.
நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.
ஆரம்பநிலை அறிகுறிகள்
1. மொழித் திறனில் தடுமாற்றம்
2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்
3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை
4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது
5. முடிவு எடுப்பதில் சிரமம்
6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை
7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்
8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்
இடைநிலை அறிகுறிகள்
நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.
1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்
2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்
3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்
4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது
5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்
6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்
இறுதிநிலை அறிகுறிகள்
இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்.
1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்
2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்
3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்
4. தானாக நடக்க இயலாது
5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது
6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது
7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது
8. தான் யார் என்பதே மறந்துவிடும்
ஆயுர்வேதமும் நினைவாற்றலும்
மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது. பிரக்ஞா என்றால் cognition என்று அர்த்தம். இது தீ எனும் அறிவு, த்ருதி எனும் மனஉறுதி, ஸ்ம்ருதி எனும் நினைவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நினைவையும் recording, returning, recalling என்று பிரிப்போம். ஒரு விஷயத்தைப் பதிவு செய்தல் (கபம்), அதை நீண்ட நாள் தக்கவைத்துக் கொள்ளுதல் (பித்தம்), தேவைப்படும்போது நினைவுபடுத்துதல் (வாதம்).
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை நவீன வாழ்க்கையில் பெரிதும் அதிகரித்துவிட்டன.
பழைய காலத்தில் மறதியைத் தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது. வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளில் சில.
நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள்
# 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 - 5 உட்கொள்ளலாம்.
# வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.
# ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
# வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.
# தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.
# கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.
# 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.
# சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.
# உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.
# தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
# அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.
# 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 - 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.
# புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
# தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.
# தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.
# பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
(உலக அல்சைமர் நோய் நாள்: செப். 21)

 

Sunday 14 September 2014

மூலிகை தரும் மருத்துவ பயன்கள்

மூலிகை தரும் மருத்துவ பயன்கள்

 

MEkznYz.jpg 



மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.


துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும். சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.