Saturday 20 September 2014

அமர்ந்தே இருந்தால் ஆபத்து!

 அமர்ந்தே இருந்தால் ஆபத்து!












இன்றைய நவீன உலகில் உடல் உழைப்புப் பணிகள் குறைந்து, மூளை உழைப்புப் பணிகள் அதிகரித்திருக்கின்றன. பெரும்பாலான அலுவலகங்களில் பணிநேரம் முழுக்க நாற்காலியை விட்டு நகர முடியாமல் இருக்கிறது.

இது உடலுக்கு கஷ்டம் கொடுக்காததைப் போலத் தோன்றினாலும், உட்கார்ந்தே செய்யும் பணியால் டென்ஷன், முதுகு வலி, அஜீரணக் கோளாறு என்று பல்வேறு பிரச்சினைகள் வரிசை கட்டி வருகின்றன.

ஆனால், ஓடியாடி உழைக்கும் வகையில் நாம் நமது பணியை திடீரென மாற்றிக்கொள்ளவும் முடியாது. எனவே அமர்ந்திருக்கும் பணியானாலும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளும் வகையில் என்னென்ன செயல்களை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்த உடனே, ஒரு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு வேலையை தொடங்கினால் படபடப்பு குறையும்.

மறுபடி, வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்சாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் தணியும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்துக்கு  ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். இதை தவிர்க்க, அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும்.

* தொடர்ந்து கணினி திரையை வெறித்துக்கொண்டிருக்கும்போது நம்மையும் அறியாமல் கண்சிமிட்டுவது குறைந்து, கண்ணில் ஈரப்பதம் குறையும். எனவே, கவனத்தோடே கண் சிமிட்டலாம்.

* கண்களை கணினித் திரையை விட்டு அவ்வப்போது விலக்கி, சற்றுத் தொலைவில் உள்ள வேறொரு பொருளைப் பார்க்கலாம்.

* கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேரச் சிற்றுண்டிக்கு எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும்.

No comments:

Post a Comment