Sunday 14 September 2014

விபரீத வியர்வை சிகிச்சை

விபரீத வியர்வை சிகிச்சை

 பருவ மழைக் காலத்திலும், வெயில் சுட்டெரித்து நம்மை பாடாய்ப்படுத்துகிறது. வெயில் என்றாலே வியர்வை தொல்லை பற்றி கேட்கவே வேண்டாம். புதிதாக போட்ட உடை கூட உடனே தொப்பலாய் வியர்வையில் நனைந்து நசநசப்பை ஏற்படுத்தும். வியர்வை நாற்றம் வேறு மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

இந்த வியர்வையை விரட்ட மக்கள் ‘ஏ.சி.’க்குள் தஞ்சம் அடைகிறார்கள். வேர்க்குரு பவுடர் போட்டுக் கொள்கிறார்கள். வியர்வை நாற்றத்தை விரட்ட ‘டியோடரண்ட்’ உபயோகிக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் நாள் முழுவதும் வெயிலில் அலைவோர் பாடு சொல்லி முடியாது. பொதுவாக உடலில் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதி அக்குள் தான். இங்குதான் வியர்வை சுரப்பிகளும் அதிகம். உடலின் மற்ற பகுதிகளை விட இங்கு வெளிப்படும் வியர்வை தங்கி விடுவதால் வியர்வை நாற்றமும் அதிகமாக இருக்கும். இந்த வியர்வையை விரட்ட ஒரு புதிய மருத்துவம் வந்து விட்டது.

இரண்டு விதமான சிகிச்சை இதில் உள்ளது. ஒன்று ‘பொடாக்ஸ்’ ஊசியை போட்டுக் கொள்வது. இதன் விலை மிக அதிகம். பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஒத்து வரும். அக்குளுக்கு சற்று கீழே இருக்கும் வியர்வை நாளங்களை கண்டுபிடித்து 12 முதல் 15 இடங்களில் இந்த பொடாக்ஸ் மருந்தை கொஞ்சம், கொஞ்சமாக ஊசி மூலம் செலுத்துவார்கள். செலுத்திய சிறிது நேரத்துக்குள்ளேயே வித்தியாசம் தெரியும். 95 சதவீதம் பேருக்கு 48 மணி நேரத்திற்குள் வியர்வை கிட்டத்தட்ட முழுவதுமாக நின்று விடுகிறது. இதன் முழுப் பயன் தெரிய ஒரு வார காலம் பிடிக்கும். வியர்வை நாற்றமும் சுத்தமாக காணாமல் போய்விடும்.

ஆனால் இது நிரந்தர தீர்வு கிடையாது. ஒரு முறை இந்த ஊசியை போட்டுக் கொண்டால் ஒரு வருடம் மட்டுமே பயன் தரும். தேவை என்றால் மீண்டும் ஊசி போட்டுக் கொள்ளலாம். இதை போடுவதால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்த எச்சரிக்கை எதையும் காதில் வாங்காமல் இந்த சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதேபோல் மற்றொரு சிகிச்சை. அதாவது, வியர்வை நாளங்களை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் அதை செயல் இழக்கச் செய்து விடுவதுதான். இந்த அறுவை சிகிச்சைக்கு 25 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சிகிச்சை முடிந்த பின்னர் வியர்வை வராது. உடலின் வெப்பத்தை குறைப்பதற்காக வெளிப்படுவது தான் வியர்வை. அது நின்று போனால் உடலில் ஏற்படும் எரிச்சல், வெப்பமான உணர்வு போன்றவற்றை தாங்கிக் கொள்வது மிக மிகக் கடினம்.

இது போக வீக்கம், தலைவலி, கழுத்து வலி போன்றவை பின்னி எடுக்கும். இதெல்லாம் இதன் பக்க விளைவுகள். வாழ்நாள் முழுவதும் இதற்கு மருந்து சாப்பிட வேண்டும். இயற்கை தேவையில்லாமல் உடலில் எதையும் உருவாக்க வில்லை. வியர்வை உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையை இயற்கையோடு ஏற்றுக் கொள்வோம். வேண்டாமே இந்த விபரீத வியர்வை சிகிச்சை.

No comments:

Post a Comment